நடிகை கங்கனா ரனாவத் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய மும்பை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

நடிகை கங்கனா  ரனாவத் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த பேட்டியின் போது நடிகை கங்கனா ரனாவத் தன்னைப்பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை கூறியதாக பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கடந்த நவம்பர் மாதம் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரிக்க ஜுகு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யுமாறு நடிகை கங்கனா ரனாவத் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அவதூறு கருத்துக்களை கூறவில்லை என்றும் கங்கனா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 

அதற்கு பதிலளித்த பாடலாசிரியர் தரப்பு வழக்கறிஞர், கங்கனா அளித்த நேர்காணலை முறையாக ஆராய்ந்த பிறகே நீதிபதி வழக்கை விசாரிக்குமாறு உத்தரவிட்டார் என்று தெரிவித்தார். பாடலாசிரியர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கங்கனா ரனாவத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.