பட்டப்பகலில் கடை புகுந்து கொள்ளை!!! பதற வைத்த சம்பவம்!!!
விருத்தாசலம் சக்தி நகரில் உள்ள ஜெராக்ஸ் கடையில், ஒரு பெண்ணை சுத்தியலால் தாக்கி ஆறு பவுன் நகை பறிப்பு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி நகரில் ஓய்வு பெற்ற அரசு துணை ஆட்சியரின் மனைவி கமலக்கண்ணி சதீஷ் பேன்சி ஸ்டோர் ஜெராக்ஸ் என்கிற பெயரில் சிறிய கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று மதியம் அனைவரும் சாப்பாட்டிற்கு சென்ற நிலையில் கமலக்கண்ணி மட்டும் கடையில் இருந்திருக்கிறார்.
அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பழைய பத்திரம் ஒன்றை ஜெராக்ஸ் போட வேண்டும் என்று கொடுத்திருக்கிறார். அவர் வாங்கி ஜெராக்ஸ் போட திரும்பிய போது கமலக்கண்ணியின் தலையில் மர்ம நபர் வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதனால், மயக்கம் அடைந்த கமலக்கண்ணி சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்த்த போது தன் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் தங்க செயின் பறிக்கப்பட்டு இருப்பதை அறிந்து கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இதனை அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் கடையில் தனியாக இருந்த பெண்மணியை தலையில் தாக்கி 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி ஆறு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் விருத்தாசலம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.