10 வருடங்களாக அகோரி வாழ்க்கை... சிக்கிய பிரபல ரவுடி, பரபரப்பு வாக்குமூலம்!

10 வருடங்களாக அகோரி வாழ்க்கை...  சிக்கிய பிரபல ரவுடி, பரபரப்பு வாக்குமூலம்!

நாமக்கல் அருகே, காவலர்களிடம் சிக்கிய அகோரி ஒருவரை விசாரித்தபொழுது, அவர் 10 கொலை வழக்குககளில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பது தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நேற்று மாலை குமாரபாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது சந்தேகத்திற்குரிய வகையில் சாலையில் வந்த ஒரு அகோரி உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால் போலீசாரின் சந்தேகம் வலுவடைந்தது.

இதனையடுத்து, அவர்கள் மூன்று போரையும்  காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பத்துக்கு மேற்பட்ட கொலைகளை செய்த சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி முஸ்தபா என்பது தெரியவந்துள்ளது.

மேலும் விசாரித்தபொழுது, தன்னை கொலை வழக்குகளில் தொடர்ந்து போலீசார் தேடிவந்ததால், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, தான் காசிக்குச் சென்று முஸ்தபா (எ) முகாமது ஜிகாத் என்கிற தனது பெயரை ஜிக்லினத் என்று மாற்றிக் கொண்டு, 10 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கையாக ஊர் ஊராகத் சுற்றி வந்துள்ளதாக, தெரிவித்துள்ளார்.

மேலும், திருச்செங்கோடு புறநகர காவல்நிலையத்திற்கு உட்பட்ட இரண்டு கொலை குற்றங்களிலும், ராசி புரத்தில் நடைபெற்ற இரண்டு கொலை வழக்குகளிலும், பரமத்தியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கிலும் மற்றும் நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட கொலை வழக்குகளிலும் தொடர்பு உள்ளதாக தெரிவித்து, மேலும் காவலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

இதன் பின்னர், காவலர்கள், முஸ்தபாவை கைது செய்து திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: "நான் முதல்வரானால், மீனவர்களிடம் கையெறி குண்டு கொடுத்தனுப்புவேன்" சீமான் ஆவேசப் பேச்சு!