ஒரு நாளைக்குள் ரூ.8000 வரை சம்பாதிக்கலாம்.. அமேசான், ஃபிளிப்கார்ட் பெயரில் மோசடி..

பத்து நிமிடத்தில் 200 ரூபாய் முதல் ஒரு நாளைக்குள் 8 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என நூதன முறையில் வேலையில்லா பட்டதாரிகளை அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் பெயரில் மோசடி செய்யும் கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.  

ஒரு நாளைக்குள் ரூ.8000 வரை சம்பாதிக்கலாம்.. அமேசான், ஃபிளிப்கார்ட் பெயரில் மோசடி..

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (29). இவர் எந்திரன் 2.0, பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். பகுதி நேரமாக திருமண நிகழ்ச்சிகளை யூ-டியூப் மூலம் நேரடி ஒளிப்பரப்பும் பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் தொடர்ந்து வாய்ப்பு தேடிக் கொண்டே பகுதி நேரமாக வேலைத் தேடி வந்த சீனிவாசனுக்கு, செல்போனில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அமேசான் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் நாளொன்றுக்கு 8 ஆயிரன் வரை சம்பாதிக்கலாம் என குறிப்பிட்டு இருந்தது.

அந்த குறுஞ்செய்தியில் தொடர்புக்கு ஒரு எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய சீனிவாசன் அந்த எண்ணில் வாட்ஸ்-ஆப் மூலம் தொடர்பு கொள்ள, அமேசான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான நடைமுறைகளை பின்தொடர கீழ்க்கண்ட வலைதளத்திற்குச் சென்றால் வீட்டில் இருந்தபடியே தினமும் பணம் சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து அந்த வலைதளத்திற்குச் சென்று அந்த பக்கத்திற்குள் செல்ல அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் மீது முதலீடு செய்தால் சிறிது நேரத்தில் முதலீடு செய்த தொகையை விட அதிக தொகை உங்கள் வங்கிக் கணக்குக்கு வரும் என தெரிவித்திருந்தனர்.

அதனை நம்பி ஸ்ரீனிவாசன் முதலில் ஒரு பொருளின் மீது 500 ரூபாய் முதலீடு செய்ய சிறிது நேரத்தில் 850 ரூபாய் அவரது வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. பின்னர், மீண்டும் பரிசோதிக்க ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய சிறிது நேரத்தில் 1500 ரூபாய் வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. உடனே மகிழ்ச்சியடைந்த சீனிவாசன் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் எனக்கருதி 4 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். அதற்கு 9 ஆயிரம் கிடைக்கும் என குறிப்பிட்டு இருந்ததால் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால், சொன்னபடி 9 ஆயிரம் திருப்பி கிடைக்கவில்லை, அவருக்கு வந்த தகவலின்படி மேலும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்தால் ஒட்டுமொத்தமாக முதலீடும், லாபமும் சேர்ந்தார்போல் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. அதனை நம்பி பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்ய அதற்கும் இவருக்கு தொகை திருப்பி கிடைக்கவில்லை.

இது தொடர்பாக பேட்டியளித்த பாதிக்கப்பட்ட சீனிவாசனின் நண்பர் மனோகர், 500 ரூபாய்க்கு ஒரு பொருளில் முதலீடு செய்து வாங்கி அமேசானிடம் கொடுத்தால், அந்த பொருளை அதிகவிலை வைத்து அமேசான் வலைதளம் மூலம் விற்பனை செய்து தருவார்கள் எனவும், முதலில் லாபத்தை தனது நண்பரின் வங்கி கணக்கிற்கு செலுத்தியதை நம்பியே அவர் பெரிய தொகைகளை முதலீடு செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவருக்கு பணம் திருப்பிக் கிடைக்காததால் அது குறித்து அந்த அமேசான் நிறுவனம் என கூறியவர்களிடம் பேசியபோது, இதில் 8 விதமான நிலை உள்ளதாகவும், ஒவ்வொரு நிலையில் உள்ள பொருட்களிலும் முதலீடு செய்து, 8 ஆம் நிலை வரை உள்ள பொருட்களில் முதலீடு செய்தால் மட்டுமே முதலீடு செய்த தொகையோடு முழு லாபம் கிடைக்கும் என டெலிகராம் செயலி மூலமாக தனது நண்பருக்கு குறுஞ்செய்தி வந்ததாகவும் தெரிவித்ததார்.

கட்டிய பணத்தை அப்படியே விட்டுவிடவும் மனமில்லாமல், எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தன் கையில் இருந்த பணம், நண்பரிடமிருந்து வாங்கிய பணம் என 7 முறை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை செலுத்திய சீனிவாசனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லாபத்தை மட்டுமல்ல அவர் செலுத்திய 97 ஆயிரத்து 500 ரூபாய் முதலீட்டுத் தொகையில் ஒரு ரூபாய் கூட திருப்பி கிடைக்கவில்லை என்பதே வேதனையின் உச்சம். அதன் பிறகு சீனிவாசன் தனது நண்பர்களிடம் விவரத்தை சொன்னபோதுதான் இது ஒரு மோசடி குறுஞ்செய்தி எனவும்,  அமேசான் நிறுவனத்தின் பெயரில் இந்த மோசடி செய்யப்படுவதை உணர்ந்துள்ளார் சீனிவாசன்.

இதையடுத்து பணத்தை இழந்த சீனிவாசன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் புகார் என்பதால் தியாகராய நகர் காவல் மாவட்ட சைபர் பிரிவுக்கு இந்த புகாரானது விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய சைபர் கிரைம் காவல்துறையினர், படித்து முடித்துவிட்டு பல்வேறு இணையதளங்கள், வலைதளங்கள் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகளை குறிவைத்து அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பிரபல நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி இது போன்ற மோசடி நடப்பதாகவும் இதுவரை 10 க்கும் மேற்பட்ட புகார்கள் இதே பாணியில் பணம் இழந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். வேலை தேடும் இளைஞர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த கூறும் எந்த நிறுவனங்களையும் நம்பி ஏமாற வேண்டாம் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.