வேங்கைவயல் விவகாரம்: அறிக்கையை தாக்கல் செய்த விசாரணை ஆணையம்!

வேங்கைவயல் விவகாரம்: அறிக்கையை தாக்கல் செய்த விசாரணை ஆணையம்!

வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆணையம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணனை கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம், இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, ஒரு நபர் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை தான் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க || பேருந்தின் மேற்கூரை மற்றும் படிகட்டில் தொங்கியபடி பயணித்தால் கடும் நடவடிக்கை!!