வெளி மாநிலத்தில் பைக் டெலிவரி செய்வதாகக்கூறி மோசடி- பெண் உட்பட இருவர் கைது

பிற மாநிலங்களில் இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்வதாக கூறி மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

வெளி மாநிலத்தில் பைக் டெலிவரி செய்வதாகக்கூறி மோசடி- பெண் உட்பட இருவர் கைது

சென்னை திருவல்லிக்கேணி மாட்டான்குப்பத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (52). இவரது மகன் குஜராத்தில் இருப்பதால் தனது இருசக்கர வாகனத்தை குஜராத்திற்கு அனுப்புவதற்காக ஆன்லைனில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி தேடியுள்ளார். அப்போது fast cargo packers என்ற இருசக்கர வாகன டெலிவரி  நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக 9,440 ரூபாயை செலுத்தி இருசக்கர வாகனத்தையும் ஒப்படைத்துள்ளார். இரண்டு மாதங்களாகியும் இருசக்கர வாகனம் குஜராத்திற்கு செல்லாததால் சந்தேகமடைந்த தனலட்சுமி அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த டெலிவரி நிறுவனத்தை நடத்தி வந்த புழல் பகுதியை சேர்ந்த பிரவீனா(30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனலட்சுமியை போல் பல பேரிடம் வெளி மாநிலத்தில் இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்வதாக கூறி பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பெற்று கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் பெறப்பட்ட இருசக்கர வாகனத்தை காவாங்கரை பகுதிக்கு கொண்டு வந்து செங்குன்றத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் மூலமாக சோழவரத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக போலீசார் விரைந்து பதுக்கி வைத்திருந்த 4 இருசக்கர வாகனங்களை மீட்டனர். இதையடுத்து பிரவீனா மற்றும் சஞ்சய் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்