படிக்கச் சொல்லி கண்டித்ததால் தாயை கொன்ற மகன்...!

படிக்கச் சொல்லி கண்டித்ததால் தாயை கொன்ற மகன்...!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அருள் செல்வம் - யுவராணி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், தர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். 14 வயதான சஞ்சய் சத்தியமங்கலம் தனியார்  பள்ளியிலும், தர்ஷனி ஸ்ரீ புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும்   பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் சஞ்சய் சரியாக படிக்காததால் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியிலேயே தங்க வைத்து படிக்க வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று சஞ்சய் விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டதால் தாய் யுவராணி அவரை கண்டித்துள்ளார். பின்னர் நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒருகட்டத்தில்  சமாதானம் அடைந்து நாளை காலை பள்ளிக்கு சென்று நன்றாக படிப்பதாக சஞ்சய் கூறிவிட்டு உறங்க சென்றுள்ளார்.  

திடீரென நள்ளிரவு 12 மணி அளவில் உறங்கிக் கொண்டிருந்த சஞ்சய், ஆத்திரத்தில் ஹாலோ பிளாக் கல்லை எடுத்து, தாய் யுவராணியின் தலையில் போட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார். பின்னர் வீட்டில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த யுவராணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே யுவராணி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தாயை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.