மனைவியிடம் தவறாக பேசிய நண்பனை தண்ணீரில் முழ்கடித்து கொன்ற கணவன்....உடலை மூட்டைகட்டி ஆற்றில் வீசிய கொடூரம் ...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே செல்போனில் மனைவியிடம் தவறாக பேசிய நண்பனை தண்ணீரில் முழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியிடம் தவறாக பேசிய நண்பனை தண்ணீரில் முழ்கடித்து கொன்ற கணவன்....உடலை மூட்டைகட்டி ஆற்றில் வீசிய கொடூரம் ...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த தம்மண்ண செட்டியார் வீதியை சேர்ந்தவர் தினேஷ்வரன். இவர் திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில் வார இறுதியில் விடுமுறையை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை தினத்தில் குமாரபாளையம் வந்து குடும்பத்தினருடன் இருந்து விட்டு செல்வது வழக்கம்.

இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14-ம் தேதி வார விடுமுறையையொட்டி குமாரபாளையம் வந்த தினேஷ்வரன், அன்று மாலை நண்பர்களுடன் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, தனது வீட்டின்  அருகில் இருந்த அவரது நண்பர் வெங்கடேஷ் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. 

இரண்டு நாட்களாக பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் தினேஷ்வரன் கிடைக்காததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் குமாரபாளையம் காவல் நிலையத்தில் தினேஷ் வரன் காணவில்லை என புகார் அளித்தனர்.

இதற்கிடையில் தினேஷ்வரனுடன் கடைசியாக இருந்த வெங்கடேஷ் மீது சந்தேகமடைந்த உறவினர்கள் அவரது வீட்டில் தகராறு செய்துள்ளனர். அதனால் வெங்கடேஷ் குமாரபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் போலீசார் வெங்கடேஷை தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தனது மனைவி நிர்மலாவிடம் தினேஷ்வரன் தொடர்ந்து செல்போனில் தவறாக பேசியதால் வீட்டிலிருந்த குடிநீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும், பின்னர் தினேஷ்வரன் சடலத்தை மூட்டை கட்டி நள்ளிரவில் தனது தம்பி கிருஷ்ணராஜ் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று காவிரியாற்றில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், கொலை செய்த அண்ணனையும் அதற்கு உடந்தையாக இருந்த தம்பியையும் கைது செய்து குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.