இளைஞரை தன்மாய்ப்புக்கு தள்ளிய பைனான்ஸ் நிறுவனம்!

திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டி, அந்தோணியார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் வில்லியம் ஹென்றி (30).  இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அக்கௌன்ட் மேனேஜராக பணி புரிந்து வந்தார். நேற்று காய்ச்சல் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

இவரது தந்தை ஆரோக்யராஜ், தாயார் மெர்சி ராணி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் இருவரும் வீடு திரும்பி வந்து பார்த்து போது, வராண்டா பகுதியில் மகன் வில்லியம் ஹென்றி சேலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடலை கீழே இறக்கி பார்க்கையில் மகன் இறந்து போனது தெரிய வந்தது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வில்லியம் ஹென்றி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது பற்றி விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் இறந்து போன வில்லியம் ஹென்றி ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கட்ட முடியாமல் அந்நிதி நிறுவனத்தின் வசூல் அழுத்தம் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார் என்பது  போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கடிதத்தை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!