10 ரூபாய் அனுப்பி 2.4 ரூபாய் லட்சம் ஆட்டையை போட்ட கில்லாடிகள்...

சென்னை மருத்துவரிடம் நூதன முறையில் வங்கிக் கணக்கிலிருந்து 2.4 லட்சம் ரூபாய் திருடிய சைபர் மோசடி கும்பல் குறித்து அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

10 ரூபாய் அனுப்பி 2.4 ரூபாய் லட்சம் ஆட்டையை போட்ட கில்லாடிகள்...

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் சாந்தினி பிரபாகர் (52). இவர் அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய செல்போன் எண்ணிற்கு கே. ஒய்.சி  எனப்படும் வாடிக்கையாளர் பற்றி  முழு தகவல் அளிக்க வேண்டும் என குறுஞ்செய்தி ஒன்று புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்துள்ளார். அந்த தகவல்களை கொடுக்காவிட்டால் தங்கள் சிம் கார்டு செயலிழந்துவிடும் என தெரிவித்ததால் விரைந்து அவர்கள் அளித்திருந்த எண்ணிற்கு வாடிக்கையாளர் சேவை மையம் என நம்பி செல்போனில் அழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அப்போது அந்த அழைப்பில் பேசிய நபர் க்விக் சப்போர்ட் (Quick Support) எனப்படும் செயலி லிங்க் ஒன்றை அனுப்புவதாகவும், அதன் மூலம் 10 ரூபாய் ரீச்சார்ஜ்  செய்தால் போதும் என தெரிவித்ததால் அதை பின்பற்றி அவர் கூறியதைப்போல் அந்த நபர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, சிம் கார்டு சேவை துண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக அச்செயலியை பதிவிறக்கம் செய்து,10 ரூபாய் பணத்தையும் வங்கி மூலம் ஆன்லைனில் அனுப்பியுள்ளார்.  அந்த செயலி மூலம் பணம் அனுப்பப்பட்டதாக ரசீது ஆன்லைனில் வந்தபிறகு வாடிக்கையாளர் தகவல் மையத்துடன் பேசிக்கொண்டிருந்த அழைப்பை துண்டிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதன்பிறகு சில நிமிடங்களில் தனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய், 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின்னும் தனது செல்போனை பயன்படுத்த முடியாத நிலை இருந்ததாகவும் அப்போதுதான் செல்போனை ஹேக் செய்து உள்ளார்கள் என்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தான் உடனடியாக தன்னுடைய வங்கி கணக்கு உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு தொடர்பு கொள்ள முடியாமலும் அதே நேரத்தில் மற்றவர்களிடம் தொடர்புகொண்டு உதவி கேட்க முடியாமலும் ஹேக் செய்து வைத்திருப்பதையும் அறிந்ததாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து லேண்ட்லைன் மூலமாக எஸ்.பி.ஐ வங்கிக்கு தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் மருத்துவர் சாந்தினி பிரபாகர் புகாரில் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் மையம் என தொடர்பு கொண்ட எண் இன்டர்நெட் மூலமாக பேசப்படும் அழைப்பு என்பதும் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார். ட்ரூ காலர் செயலி மூலம் பேசிய நபர் யார் என்று பார்க்கும் போது கூட வோடோபோன் கே. ஒய்.சி சர்வீஸ் என்ற பெயரே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் எந்த வித OTP  அல்லது கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவலையும் வாடிக்கையாளர் மையம் என கருதி பேசியவரிடம் தெரிவிக்காமலேயே தன்னுடைய செல்போனை ஹேக் செய்து இந்த திருட்டுச் சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், சிம்கார்டு நிறுவனங்களிலிருந்து குறுஞ்செய்தி வருவதுபோல் தனியார் எண்ணில் இருந்து சிலர் குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும், குறிப்பாக கே ஒய் சி அப்டேட் செய்ய வேண்டும் இல்லையெனில் சிம் கார்டு செயலிழந்து விடும் என்ற குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு மோசடியை கும்பல் அரங்கேற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக அதிகாரப்பூர்வ சிம் கார்டு நிறுவனங்களிலிருந்து வராத குறுஞ்செய்தியை நம்பி பலரும் இதுபோல் ஏமாந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக இந்த மோசடி கும்பல் "டீம் வ்யூவர்" (Team viewer) போன்ற  பல செயலிகளை பயன்படுத்தி பணத்தைச் செலுத்தினால் சிம் கார்டு சேவையை தொடர்ந்து பெறலாம் என கூறி ஏமாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் செயலிகள் பதிவிறக்கம் செய்யும் நபர்களின் செல்போனில் வங்கி அட்டை தகவல்களை பதிவு செய்யும் அதே நேரத்தில், மோசடி கும்பல் கணினியிலும் அந்த தகவல்கள் அச்சு எடுத்தார் போல பதிவாகும், இதன் மூலம் தேவையான அனைத்து தகவல்களும் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. மேலும் நமது செல்போனை நமக்கு தெரியாமலயே ஹாக் செய்து ஒ.டி.பி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் திருடி பணத்தை கொள்ளை அடிப்பதை ஒரு சில நிமிடங்களில் செய்து முடிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இதுபோன்ற மோசடி பல்வேறு சிம்கார்டு நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் அதிகளவு நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக பி.எஸ்.என்.எல் வோடபோன் ஆகிய செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.