சுரங்க அறை அமைத்து பாலியல் தொழில்: சினிமா பாணியில் மாஸ் காட்டி தூக்கிய போலீஸ்...

கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் சினிமா பாணியில் சுரங்க அறை அமைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரங்க அறை அமைத்து பாலியல் தொழில்:  சினிமா பாணியில் மாஸ் காட்டி தூக்கிய போலீஸ்...

தும்கூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதிகளில் அதிகளவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கேத்தசந்திரா காவல்நிலைய காவலர்கள் அப்பகுதியில் உள்ள விடுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நந்தி லாட்ஜ் எனும் தனியார் விடுதியில் சந்தேகிக்கும் வகையில் அறைகள் அமைக்கப்பட்டு இருந்ததைக் கண்டனர்.

முதலில் காவலர்கள் சோதித்த போது யாரும் இல்லாதது போல் இருந்துள்ளது. இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார் அறையின் சுவரில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த மர மேஜையை அகற்றி தட்டி பார்த்துள்ளனர். அப்போது, ஒரு நபர் மட்டும் செல்லும் அளவில் கதவு ஒன்று திறந்துள்ளது. 

இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான காவல்துறையினர், சினிமா பாணியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க அறையில் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் மற்றும் 3 இளைஞர்களை கைது செய்தனர். அண்மையில் தும்கூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆணுறைகள் கொட்டப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகேயே பாலியல் செய்யும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.