பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு; இன்று விசாரணை!

பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு; இன்று விசாரணை!

சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம்  பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. வழக்குப்பதிவு செய்தார்.

அதிமுக ஆட்சி காலத்தில் 2002 மார்ச் 14ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவாக விசாரணைக்கு எடுத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி விசாரித்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்டவிரோதமானது என்பதாலும், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி என்பதாலும் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளதாக நீதிபதி விளக்கம் அளித்த இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இதேபோல திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பான மறுஆய்வு மனுக்கள் செப்டம்பர் 20ஆம் தேதியும், அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் மீதான மறுஆய்வு மனு செப்டம்பர் 27ஆம் தேதியும் விசாரணைக்கு வரவுள்ளன.

இதையும் படிக்க: வில்லன் நடிகரிடம் மோசடி; திமுகவினர் மீது புகார்!