ஹெச்.ராஜா மீதான பெரியார் சிலை உடைப்பு வழக்கு; ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்!

ஹெச்.ராஜா மீதான பெரியார் சிலை உடைப்பு வழக்கு; ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்!

பெரியார் சிலை உடைப்பு, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் உள்பட பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக, வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதே போல் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி  ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவிவழி செய்திதான் என்றும், ஆதாரம் ஏதும் இல்லை எனவும், பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டதற்கு  ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை என்றும் ஹெச். ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எம்.பி. கனிமொழி மீதான கருத்து  அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹெச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

ஹெச்.ராஜாவின் பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்றும் சுட்டிக்காட்டிய காவல் துறை, வழக்குகளை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளை ஒன்றாக சேர்த்து, மூன்று மாதத்திற்கு விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:வழியில் பள்ளம்; பாதையை மாற்றிய சந்திரயான்-3 ரோவர்!