'ஆன்லைன் டிரேடிங்' மோசடி கும்பல் கைது...!!

'ஆன்லைன் டிரேடிங்' மோசடி கும்பல் கைது...!!

ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணிவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவை சேர்ந்தவர் சாந்தி். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் மகாலட்சுமி  தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். 

கடந்த 15 வருடங்களாக சாந்தி ஆம்வே பொருட்களை வாங்கி விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார். இதில் நஷ்டம் அடைந்ததால் குடும்பத்தில் பணக்கஷ்டம் ஏற்படட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த மாணவி மகாலட்சுமி தனது தாய்க்கு உதவி செய்ய எண்ணி இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் டிரேடிங் விளம்பரத்தை பார்த்துள்ளார். 

அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் தாங்கள் முதலீடு செய்யும் தொகையை இரட்டிப்பு செய்து தருவதாக குறிப்பிட்டிருந்தது. இதனை நம்பி கடந்த மார்ச் மாதம் மாணவி மகாலட்சுமி தன் தாய்க்கு தெரியாமல் அவர் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாயை எடுத்து ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். ஆனால் விளம்பரத்தில் கூறியது போல் பணம் வராததால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த மாணவி மகாலட்சுமி தாய்க்கு பயந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து முத்தையால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொல்கத்தாவை சேர்ந்த கும்பல் ஒன்று இணையத்தில் போலி விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்து வந்த தனிப்படை போலீஸார் 14  நாட்களாக கொல்கத்தாவில் முகாமிட்டு மோசடியில் ஈடுபட்ட  கொல்கத்தாவை சேர்ந்த அமானுல்லா கான்(20), முகமது பாசில்(21), முகமது ஆசிப் இக்பால்(22) ஆகிய மூன்று பேரை நேற்று இரவு கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.  பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் இணையத்தில் போலி விளம்பரம் செய்து பல கோடி மோசடியில் ஈடுபட்டதும், இவர்கள் மீது மேற்கு வங்கத்தில் பல்வேறு சைபர் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதையும் படிக்க:மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் "விரைவில் மாற்றம்"!