கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு...முன்பகையை மனதில் வைத்து இளைஞர் கொலை....!

ஓசூர் அருகே கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறை மனதில் வைத்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு...முன்பகையை மனதில் வைத்து இளைஞர் கொலை....!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா என்பவரது மகன் மோகன்பாபு, சிவில் இன்ஜினியரான இவர் அப்பகுதியில் ஒப்பந்தம் எடுத்து வீடுகளை கட்டி வந்துள்ளார். இவரும் அதேகிராமத்தைச் சேர்ந்த பவன், மூர்த்தி, திலக், சுரேஷ், அப்பு (எ) ராகேஷ் ,மற்றும் ஹேமந்த்  ஆகியோரும் சேர்ந்து மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

அதேபோல கடந்த 26 -ஆம் தேதி கிரிக்கெட் விளையாடியபோது மோகன்பாபுவிற்க்கும் ஆறு இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள்  அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் அந்த 6 இளைஞர்களும் பகையை மனதில் வைத்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி சொப்பட்டி கிராமம் அருகேயுள்ள தனியார் லே-அவுட்டில் மோகன்பாபு அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற 6 இளைஞர்கள் மோகன்பாபுவிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் மோகன்பாபுவிற்க்கு மார்பில் இரண்டு வெட்டுகளும், கை மற்றும் முதுகு என உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுகளும் விழுந்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அவரது நண்பர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்பாபு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து அவரது உடல் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து மத்திகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கொலையாளி 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.