அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு; நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு !

அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு; நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு !

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக  தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின் விசாரணையை நவம்பர் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக,  அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு  வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை, பொன்முடி உள்ளிட்டோர் பதிலளிக்க  உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,  தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.  

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மொழி பெயர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினார். மேலும், பண்டிகை கால விடுமுறைக்கு பின்னர் இந்த மாத கடைசி வாரத்தில் விசாரணைக்கு வரும் என தெரிவித்தார். 

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிக்க:  10 புலிகள் இறந்த விவகாரம்; விசாரணைக் குழு அமைக்க ஆம் ஆத்மி கோரிக்கை!