மூக்குப்பொடி சித்தர் கோவிலில் சம்பவம்... கடவுள் சொன்னதாக கூறி விபரீதம்!

சென்னையில் காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி ஒருவர், சிவபெருமான் உத்தரவின் பேரில் கொலை செய்துள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். 

சென்னை திருவான்மியூர் திருமுடி விநாயகர் கோவில் தெருவில் மூக்குப்பொடி சித்தர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலில் நீலாங்கரையைச் சேர்ந்த 48 வயதான கமல் உஸ்மான் என்பவர் வழிபடுவது வழக்கம். 

இந்நிலையில் அக்டோபர் 29-ம் தேதியன்று திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு சென்ற கமல் உஸ்மான், தான் செந்தில்குமார் என்பரை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இதனால் திடுக்கிட்டுப் போன காவலர்கள், யார்? என்ன விவரம் என கேட்டதற்கு கமல் உஸ்மான் கூறியவை ஒவ்வொன்றும் தலையையே சுற்றிப் போக வைத்துள்ளது. 

மூக்குப்பொடி சித்தர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில், திருவான்மியூரைச் சேர்நத் செந்தில்குமார் என்பவர் வடமாநில தொழிலாளர்களுடன் தங்கி வந்துள்ளார்.  

50 வயதான செந்தில்குமார், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து திருவான்மியூரில் வசித்து வந்தார். அவ்வப்போது சில பெண்களுடன் போனில் பேசும் செந்தில்குமார், ஒரு சிலரை அறைக்கு அழைத்து செல்வதும், மூக்குப் பொடி சித்தர் கோயில் அருகே நிற்க வைத்து பேசியும் வந்துள்ளாராம்.

மூக்குப் பொடி சித்தர் மீதும், சிவபெருமான் மீதும் தீரா பக்தியில் இருந்த கமல் உஸ்மானுக்கு செந்தில்குமாரின் செயல்கள் அனைத்தும் கோபத்தை கிளப்பியிருக்கின்றன. இந்நிலையில் அக்டோபர் 30-ம் தேதியன்று செந்தில்குமாரை அழைத்த கமல், கத்தியால் 18 முறைக்கு மேல் குத்திக் கொலை செய்து விட்டு காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். 

புனிதமான கோயிலுக்குள் செந்தில்குமார் அபத்தம் செய்து விட்டதாகவும், செந்தில்குமாரை கொலை செய்யுமாறு சிவபெருமான் தன்னிடம் சொன்னதாகவும், சிவன் சொன்னதை தற்போது செய்து முடித்துள்ளதாகவும் கூறி போலீசாரையே கிறுகிறுக்க செய்துள்ளார் கமல் உஸ்மான்.