அருணாச்சலேஸ்வரர் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

அருணாச்சலேஸ்வரர் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் ஆவணங்களை சேகரித்து, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அம்மாயி அம்மாள் என்பவர் அடையாறில் உள்ள தனது நிலத்தை 
திருவண்ணாமலையில் உள்ள  அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு எழுதி வைத்தார். கோவிலுக்கு கொடுக்கப்பட்ட இந்த நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்க கோரி அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

வழக்கு நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், நிலம் மீட்கப்பட்டு கோயில் பயன்பட்டிற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, வருவாய் துறை ஆவணங்களுடன் உறுதிபடுத்தி, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கோயில் நிலங்களை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்வதை தடுக்கும் வகையில் உடனடியாக அனைத்து பதிவுத்துறை அதிகாரிகளுக்கும்  சுற்றறிக்கை அனுப்பவும் நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார். 

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த உத்தரவை ஆறு மாதங்களில் அமல்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:என்.எல்.சி. விவகாரம்: பிரமாண மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!