தந்தையே மகனை அடித்துக் கொன்ற கொடூரம்.. உடலை வாய்க்காலில் வீசி நாடகமாடிய தந்தை கைது!!
கோபிச்செட்டிபாளையத்தில் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை, தந்தையை அடித்துக் கொலை செய்து வாய்க்காலில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன், இவரது மகன் பெரியசாமி, இவர் அடிக்கடி வேலை நிமித்தமாக செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறி வெளியூர் சென்ற பெரியசாமி வீடு திரும்பவில்லை என காளியப்பன் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதனையடுத்து புகாரின் பேரில் திங்களூர் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், வாய்க்காலில் பெரியசாமி சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அவரது தந்தையிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதில் மதுவிற்கு அடிமையான பெரியசாமி, அவ்வப்போது மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், மேலும் பருத்தி விற்பனை செய்த 1 லட்சம் ரூபாயை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகன் என்றும் பாராமல் அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அருகில் இருக்கும் வாய்க்காலில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல் நாடகமாடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.