முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு...
பாலியல் புகாரில் கைதான முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் அனுமதி மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.
நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பெங்களூரில் பதுங்கி இருந்த மணிகண்டனை கடந்த 20 ஆம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.ஆனால் அனைத்து வசதியுடன் சைதாப்பேட்டை கிளை சிறையில் மணிகண்டன் சொகுசாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 5 நாள் காவல் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மணிகண்டன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இவ்வழக்கில் இல்லை என வாதாடினர்.
ஆனால் மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால் வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை பெற விசாரணைக் காவல் தேவைப்படுவதாக வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் மோகனாம்பாள் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க போதிய முகாந்திரம் இல்லாததால் காவல் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜுலை 2 ஆம் தேதியுடன் மணிகண்டனின் நீதிமன்ற காவல் முடிகிறது என்பது குறிப்பிடதக்கது.