வரதட்சணைக்காக அண்ணியை திருமணம் செய்த கொழுந்தன்... வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பெண்...

மதுரை செக்கானூரணியில் அண்ணன் இறந்த நிலையில் அண்ணியை வரதட்சணைக்காக தம்பி திருமணம் செய்த நிலையில், அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சணைக்காக அண்ணியை திருமணம் செய்த கொழுந்தன்... வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த  பெண்...

மதுரை மாவட்டம் செக்காணூரணி அடுத்த K.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த தலையாரி பாண்டி என்பவரது மூத்த மகன் பிரபாகரனுக்கும், காளவாசல் பகுதியை சேர்ந்த மாளவிகா என்ற கல்லூரி மாணவிக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்திற்காக மணப்பெண்ணிற்கு வரதட்சணையாக 120 சவரன் தங்க நகையும், 10 லட்ச ரூபாய் ரொக்கமாவும், சீர்வரிசை பொருட்களும் வழங்கியுள்ளனர்.

ஆனால் திருமணமான 10 மாதத்தில் மணமகன் பிரபாகரன் உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில், மாளவிகா தனது தந்தை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.  இந்நிலையில், இறந்த பிரபாகரனின் தம்பி பிரகாஷ், மாளவிகாவிடம் காதல் ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்த மறுநாள் முதலே மாளவிகாவிடம்  வரதட்சணை கேட்டு மணமகன் பிரகாஷ், தந்தை பாண்டி, தாய் ஆகியோர் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாளவிகா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாப்பிள்ளை பிரகாஷ், அவரது தந்தை பாண்டி ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர். தப்பியோடிய மாமியாரை தேடி வருகின்றனர்.