கத்தியால் குத்தி காதலி கொலை....திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வெறிச்செயல்....!!

நாமக்கல் அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை, கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கத்தியால் குத்தி காதலி கொலை....திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வெறிச்செயல்....!!

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்  ருபேஷ்குமார் என்பவரும் அதே மாநிலம்,‌ ராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் துளசி   ஆகிய இருவரும் முகநூலில் பேசி பழகி கடந்த மார்ச் மாதம் முதல் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் துளசியின் வீட்டிற்கு தெரியவரவே, அவரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்துள்ள பிள்ளகளத்தூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலைக்கு பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், துளசி கடந்த வாரம் தனது காதலன் ரூபேஷ்குமாரையும் அழைத்து வந்து அதே நூற்பாலையில் பணிக்கு சேர்த்துள்ளார். இருவரும் நூற்பாலையில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தனித்தனியாக வசித்து வந்தனர்.

நேற்று இருவரும் பணிக்கு சென்று வந்த நிலையில் ரூபேஷ்குமாருக்கும் துளசிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் உச்சிக்கே சென்ற காதலன் ரூபேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலி துளசியை குத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதில் சம்பவ இடத்திலேயே துளசி உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் இருந்த ரூபேஷை மீட்ட சக தொழிலாளர்கள் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்து வந்த போலீசார்,  உயிரிழந்த துளசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு‌ அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தனர்.

இதற்கிடையில் போலீசாரின், முதற்கட்ட விசாரணையில், ரூபேஷ் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு பழங்கள், பூ ஆகியவை வாங்கி கொண்டு துளசியை சந்தித்தாகவும் அதற்கு துளசி தனது பெற்றோர்கள் கூறும் நபரை தான் திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் ரூபேஷ் தான் கொண்டு வந்திருந்த பூ, பழங்கள் வைத்திருந்த பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து துளசியின் மார்பு, வயிறு உள்ளிட்ட  9 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே துளசி உயிரிழந்த நிலையில் ரூபேஷ் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு‌ முயற்சித்ததாக ரூபேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.