அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்...! ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஊழியர்களை தாக்கியவர்கள் கைது...!

திண்டிவனம் அருகே அதிமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தி, ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஊழியர்களை தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்...! ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஊழியர்களை தாக்கியவர்கள் கைது...!

திண்டிவனம் ரோஷணை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். கார் ஓட்டுநரான இவர், திண்டிவனம் அதிமுக வில் 5-வது வார்டு கிளை கழக நிர்வாகியாக  இருந்து வருகிறார். இவருக்கும், கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் என்பவருக்கும்  கடந்த 10 ஆண்டுகளாக முன் விரோதம் இருந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது, சங்கர், அவரின் தம்பி வேலவன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் சதீஷ் குமார் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த சதீஷ்குமாரை அந்த கும்பல், கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் சதீஷ்குமாருக்கு  தலை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

இதனால் சதீஷின் உறவினர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அழைத்து சென்றனர். சதீஷை ஏற்றி வர சென்ற ஆம்புலன்ஸ் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு காலியாக வந்தது. இந்த ஆம்புலன்சில், சதீஷை ஏற்றி வருவதாக நினைத்த அந்த கும்பல், மருத்துவமனை கேட்டின் அருகில் ஆம்புலன்சை மடக்கி, கையில் வைத்திருந்த ஆயுதங்களால், முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் விநாயகமுருகன் மற்றும் டெக்னிஷியன் சரண்ராஜ் ஆகியோரை சரமாறியாக தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 

மேலும் மருத்துவமனைக்கு ஆட்டோவில் வந்த சதீஷ்குமாரையும் மருத்துவமனை வளாகத்தில் அந்த கும்பல் மீண்டும் தாக்கியுள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமார் மேல் சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து  பிரபா, வேலு ஆகிய இருவரை கைது செய்ததுடன், மேலும் பலரை வலை வீசி தேடி வருகின்றனர்.