காளையை கேலி செய்ததால் ஏற்பட்ட தகராறு; தடுக்க வந்தவருக்கு ஏற்பட்ட விபரீதம்!

காளையை கேலி செய்ததால் ஏற்பட்ட தகராறு; தடுக்க வந்தவருக்கு ஏற்பட்ட விபரீதம்!

திருச்சி: திருச்சியில், ஜல்லிக்கட்டு காளையை கேலி செய்ததால் ஏற்பட்ட தகராறில், ஒருவர் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பூவாளூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் ( 50). இவர் தற்போது தனது மனைவி லட்சுமியின் சொந்த ஊரான திருச்சியை அடுத்த புங்கனூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு பிரகாஷ் மற்றும் பிரஷாந்த் என இரு மகன்கள் உள்ளனர்.

பிரகாஷ் பூவாளூரிலும், பிரசாந்த் தன் பெற்றோருடன் புங்கனூரில் வசித்து வருகிறார்.  ஜல்லிக்கட்டில்  ஆர்வம் கொண்ட பிரசாந்த் ஜல்லிக்கட்டு காளையும் வளர்த்து வருகிறார்.  இதேபோல் அவர்களது உறவினர்களான புங்கனூர் மேலத்தெருவை சேர்ந்த முத்துவீரன் மகன்கள் சரத் குமார் (26), ரஞ்சித் (24) ஆகியோரும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறார்கள்.  சரத்குமார் அவ்வப்போது, பிரசாந்தின் காளையை பார்த்து அந்த காளை ஆட்டுக்குட்டி போல் உள்ளது என கூறி அடிக்கடி கேலி செய்துள்ளார். 

நேற்று இரவு தன் வீட்டின் அருகே  பிரசாந்த் தனது தந்தை தமிழரசனுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்களான சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரும் பிரசாந்தை பார்த்து நீ என்ன ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறாய்? உனது காளை ஆட்டுக்குட்டி போல உள்ளது. உனது மாட்டை எளிமையாக அடக்கி விடுவோம் என்று கேலியாக பேசியுள்ளனர். 

இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பிரசாந்த் அவர்களை கடுமையாக கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனை தடுக்க வந்த தமிழரசனை சரத்குமார் நெஞ்சில்  அடித்து தள்ளியதில்  அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி  விழுந்தார். 

உடனடியாக அவரை, மகன் பிரசாந்த் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 

இது குறித்து சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனையடுத்து தமிழரசன் உடலை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து பிரசாந்த்  சோமரசம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு சகோதரர்களான சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜல்லிக்கட்டு காளைக்காக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.