ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி  உயிரிழந்தார்.

ஐவின்ஸ் என்ற தனியார் உணவகத்தில் சந்தைபேட்டை புதூரை சேர்ந்த கலையரசி என்ற சிறுமி தனது தாய் மற்றும் சகோதரருடன் 16ம் தேதி ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு சாப்பிட்ட உணவால் உடல்நலம் பாதிப்படைந்துள்ளது. இதைதொடர்ந்து மூவரும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதன் பின் வீடு திரும்பிய நிலையில் சிறுமி உயிரிழந்தார்.

இதேபோல் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவியின் பிறந்தநாளையொட்டி  அவருடைய நண்பர்கள் 13 பேர் பரமத்திசாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சவர்மா சாப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் மாணவி உட்பட 14 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் உணவகத்தை சோதனையிட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

இதையும் படிக்க || "சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளது" பிரதமர் மோடி!!