நள்ளிரவில் நுழைந்த திருடர்கள்... கழுத்தில் கத்தியை வைத்தும் பயப்படாத மாணவி... துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய சிங்கபெண்..!!

நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்களை கல்லூரி மாணவி தனியாக எதிர்த்துப் போராடி திருட்டை எதிர்த்த சம்பவம் கேட்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

நள்ளிரவில் நுழைந்த திருடர்கள்... கழுத்தில் கத்தியை வைத்தும் பயப்படாத மாணவி... துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய சிங்கபெண்..!!

குஜராத்தின் கதோதரா நகரில் சல்தான் பகுதியில் ராம் கபீர் சொசைட்டியில் வசித்து வருபவர் தான் ரியா. கல்லூரி மாணவியான இவர், இரவில் தூங்காமல் தனது தேர்வுக்காக தயாராகி கொண்டு இருந்துள்ளார்.  இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டின் பின்புறம் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அதற்கு அடுத்த வினாடிகளில் கையில் கத்தியுடன் ஒரு நபர் ரியாவின் முன் வந்து நின்றுள்ளான்.  

இதில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி என்ன, ஏது என்று அறிவதற்குள் அந்த நபர், படுக்கை மீது ஏறி வந்து, ரியாவின் கழுத்தில் கத்தியை வைத்து உள்ளான். அதன்பின்பு, 2 பேர் அந்த அறைக்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் ஒருவன் தூங்கி கொண்டிருந்த ரியாவின் இளைய சகோதரியை தாக்க முயன்றுள்ளான்.  அப்போது இவர்கள் கொள்ளை கும்பல் தான் என்று ரியாவுக்கு புரிய வந்துள்ளது.

இந்நிலையில், ரியாவின் கழுத்தில் கத்தி வைத்திருந்த நபர் சற்று கவனம் தவறியதை, சுதாரித்துக்கொண்டு உடனடியாக அந்த கத்தியை தள்ளி விட்ட ரியா, உதவி கேட்டு கூச்சல் போட்டுள்ளார். அந்த சத்தத்தில் ரியாவின் தாயார் எழுந்து வந்ததும், அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். இதில் ரியாவின் இடது கையில் பெரிய காயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பற்றி கூறிய போலீசார்,  திருடர்கள் விலையுயர்ந்த பொருட்கள் எதனையும் திருடி செல்லவில்லை. மொபைல் போன் ஒன்றை மட்டுமே தூக்கி சென்றுள்ளனர்.  சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

இதனையடுத்து பேசிய மாணவி, நான் நம்பிக்கையை இழக்கவில்லை.  தைரியமுடன் செயல்பட்டது என்னையும், எனது சகோதரியையும் காப்பாற்றியதுடன், திருட்டையும் தடுக்க முடிந்தது என கூறியுள்ளார்.