ஜாமினில் வெளிவந்த நபர்... அடுத்த நாளே நடந்த கொடூரம்!!

ஜாமினில் வெளிவந்த நபர்... அடுத்த நாளே நடந்த கொடூரம்!!

பெரம்பூரில் ஜாமீனில் வெளியே வந்த நபரை ஓட ஓட துரத்தி வெட்டிய ஐந்து பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

சென்னை  பெரம்பூரில் ஜாமினில் வெளியே வந்த நபரை ஓட ஓட துரத்தி வெட்டிய ஐந்து பேரை காவல்துறையினா் கைது செய்தனா். 

சென்னை, பெரம்பூர், ரமணா நகர் ஜவகர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராமர் 28. இவர் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த மூன்றாம் தேதி குடிபோதையில் ராஜா (54) என்ற நபரை கத்தியால், ராமர் வெட்டினார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார், ராமரை அன்றைய தினமே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த ராமர், நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் பெரம்பூர் எஸ் எஸ் வி கோவில் மூன்றாவது தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தார். 

அப்பொழுது அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்து, ராமரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்துள்ளார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் கடந்த மூன்றாம் தேதி ராஜா என்பவரை குடிபோதையில் வெட்டியதால், அதற்கு பழிவாங்க ராஜாவின் உறவினர்களான பெரம்பூர் நட்டால் கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்த சூர்யா (23), முத்து (28), சிவக்குமார் (30), சரவணன் (35) மற்றும் வெங்கடேசன் (37) ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.  

இதனை அடுத்து நேற்று காலை செம்பியம்  போலீசார் ஐந்து பேரையும் பி.பி ரோடு சுடுகாடு அருகே வைத்து பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க || திருநங்கையை கடத்திச் சென்ற நபர்... மீட்க சென்ற காவலரை கடித்த பரிதாபம்!!