தேனி தேர்தல் வழக்கு; குற்றச்சாட்டுகளை மறுத்த ஓ.பி.ரவீந்திரநாத்!

தேனி தேர்தல் வழக்கு; குற்றச்சாட்டுகளை மறுத்த ஓ.பி.ரவீந்திரநாத்!

தேனி மக்களவை தொகுதி தேர்தல் வழக்கில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை என்று கூறியிருந்தார். 

இந்த தேர்தல் வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் குமாரின் நிராகரிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் முன்பு நடைபெற்ற விசாரணையின்போது, ஏற்கனவே மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் குமார், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை ரவீந்திரநாத் குமாரிடம் நீதிபதி கேட்டிருந்தார். இது தொடர்பாக ஆவணங்களை சமர்பிக்க தயாராக இருப்பதாக ரவீந்திரநாத் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, தன் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டுமென நீதிபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை நீதிபதி ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், ரவீந்திரநாத்குமார் நேற்று நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது அவர் தரப்பு மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் தெரிவித்த கேள்விகளுக்கு, சாட்சி கூண்டில் ஏறி ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வாக்குமூலத்தை அளித்தார்.

பின்னர் மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் வி. அருண் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தார். அதிகார துஷ்பிரயோகம், ஆவணங்களில் திருத்தம், சொத்து கணக்குகளை முறையாக காட்டாதது, பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்து மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக நின்றபடியே விளக்கம் அளித்தார்.

இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 30) நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:"2024-ல் பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்" பொன்.ராதாகிருஷ்ணன் விருப்பம்!