2 ரவுடிகள் என்கவுண்டரில் கொலை!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  

சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட மாறம்பேடு கண்டிகையில் தலைமறைவான குற்றவாளிகள் இருவரும் பதுங்கியிருந்ததாக தனிப்படைப் போலீசாருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு  சென்ற போலீசார் இருவரையும் கைது செய்ய முயன்ற போது போலீசாரை நோக்கி சுட்டதில் மூன்று  போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் குண்டு பாய்ந்து காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். 

இருவரின் உடல்களும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த காவலர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முத்துசரவணன் மீது கொலை உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், சண்டே சதீஸ் மீது கொலை உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளதாவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

என்கவுண்டர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜ் தனது மகனை போலீசார் போலி என்கவுண்டர் செய்யவுள்ளதாக டிஜிபி அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: அதிக பயணிகளை ஏற்றி சென்ற ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்!