அமைச்சரின் மருமகன் எனக்கூறி ரூ.1.25 கோடி மோசடி.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தோர் மீது புகார்

அசாம் மாநில அமைச்சரின் மருமகன் எனக்கூறி 1.25 கோடி மோசடி செய்துவிட்டு, தன்னை கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ரவுடி, காவலர் உட்பட 3 நபர்கள் மீது பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  

அமைச்சரின் மருமகன் எனக்கூறி ரூ.1.25 கோடி மோசடி.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தோர் மீது புகார்

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் சைதாப்பேட்டையில் தொலைதூர கல்வி நிலையத்தை வைத்து நடத்திவருகிறார். இவருக்கு அறிமுகமான  கார்த்திக் பிரசன்னா என்பவர், தான் அசாம் மாநில அமைச்சரான ராஜன் கொஹைனின் மருமகன் என தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இந்திய விமான படையில் பைலட் எஸ்கார்ட் ஆபிசராக இருப்பதாக அடையாள அட்டை காண்பித்துள்ளார். மேலும்  ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், தலா ஒருவருக்கு 3.5 லட்ச ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாகவும், தனக்கு கமிஷன் தொகையாக 25 ஆயிரம் ரூபாயும், ஏஜெண்டாக வேலை பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுமக்களிடம் பெற்ற 1.25 கோடி ரூபாய் பணத்தை கார்த்திக் பிரசன்னாவின் மனைவியான ஜூரி ராணி தேவியின் வங்கி கணக்கிற்கு முத்துக்குமரன் அனுப்பியுள்ளார். ஆனால் நீண்ட மாதமாக பணி வாங்கி தராததால் சந்தேகமடைந்து ரயில்வேயில் சென்று விசாரித்த போது கார்த்திக் பிரசன்னா அசாம் அமைச்சரின் மருமகன் கூறியது பொய் என்றும், இதே போல் பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.  

இதனால் கார்த்திக் பிரசன்னாவிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் அருகே வரக்கூறியதாகவும், அப்போது அடையாளம் தெரியாத 4 நபர்கள் போலீஸ் எனக்கூறி காரில் கடத்தி சென்றனர். பின்னர் கொடைக்கானலுக்கு கடத்தி சென்று விடுதியில் அடைத்துவைத்து நிர்வாணமாக்கி மிரட்டி வேலை வாங்கி தருவதாக பொதுமக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றியது தான் என செல்போனில் வீடியோ எடுத்து வைத்து 80 ஆயிரம் பணத்தையும் பறித்து தப்பி சென்றனர்.

பின்னர் மதுரை ரவுடி கணபதி, கார்த்திக் பிரச்சன்னா, மற்றும் ஐபி.எஸ் அதிகாரி ஒருவருக்கு பாதுகாப்பு காவலராக இருக்கக்கூடிய அருண் இணைந்து மீண்டும் தன்னிடம் 15 லட்சம் கேட்டு மிரட்டினார்கள். இதனால் வேறு வழியின்றி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், உடனடியாக 1.25 கோடி பணத்தை பறித்துவிட்டு மிரட்டிய கார்த்திக் பிரசன்னா, காவலர் அருண், ரவுடி கணபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். புகாரின் மீது உண்மை தன்மை உள்ளதா என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முத்துகுமரனை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.