கேள்வித்தாள் சர்ச்சை - விசாரணை மேற்கொள்ள குழு அமைப்பு!

கேள்வித்தாள் சர்ச்சை - விசாரணை மேற்கொள்ள குழு அமைப்பு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் ஏற்பட்ட கேள்வித்தாள் சர்ச்சையில் விசாரணை மேற்கொள்ள உயர்மட்டக்குழு அமைத்து உயர்க்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சை கேள்வி:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அண்மையில் எம்.ஏ பாடப்பிரிவு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் எம்.ஏ வரலாறு பாடப்பிரிவு 2ம் ஆண்டு படித்து வந்த மாணவர்களுக்கு  சில சாதி பெயர்களை குறிப்பிட்டு, ’தமிழ்நாட்டில் எது தாழ்ந்த சாதி’ என்று சாதி பற்றி வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டது.

சாதி கேள்வியால் எழுந்த சர்ச்சை:

தேர்வில் சாதி குறித்த கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து, மாணவர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சாதி ஒழிப்பில் ஈடுபட்ட பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில்,  சாதிகளை குறிப்பிட்டு கேள்வி எழுப்புவதா எனவும் சர்ச்சை வெடித்தது.

கேள்வித்தாள் சர்ச்சைக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்னாதன் விளக்கம்:

கேள்வித்தாள் சர்ச்சையடுத்து, பெரியார்  பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்னாதன் விளக்கம் அளித்தார். அதில், தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்படவில்லை என்றும், பிற பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களால் தயார் செய்யப்பட்டவை எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வினாத்தாள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக அதை முன்கூட்டியே படித்து பார்க்கும் நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து  உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதி அளித்தார்.

பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

கல்லூரி வினாத்தாளில் சாதியை குறிப்பிட்டு கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையான நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில், இந்த சர்ச்சைக்குரிய  வினா மூலம் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருந்திருந்தால் பல்கலைக்கழக நிர்வாகம் மன வருத்தத்தை பதிவு செய்து கொள்வதாகவும்,  இந்த கேள்விக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த விதமான நேரடியான தொடர்பும் இல்லை  என்றும், மேலும் இதுபோன்ற  தேவையற்ற கேள்விகள் இனி வினாத்தாளில் இருக்காது எனவும் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது.

கேள்வித்தாள் சர்ச்சையில் விசாரணை மேற்கொள்ள குழு அமைப்பு:

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகம் மீது ஏற்பட்ட கேள்வித்தாள் சர்ச்சையில், விசாரணை மேற்கொள்வதற்காகவும், தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காகவும் உயர்க்கல்வித்துறை குழுவை அமைத்துள்ளது.  உயர்க்கல்வித்துறை அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில் துணைச் செயலாளர் தனசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்தக் குழுவினர் தனது அறிக்கையை, ஆணை வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.