ரயில்வே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு? ரயில்வே துறை அமைச்சர் அளித்த வாக்குறுதி என்ன?!!

“தேஜஸ்” எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லவும், ரயில்வே டிராக் மேன்களுக்கு “இரட்சக்” என்ற பாதுகாப்பு கருவி வழங்கவும உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சு. வெங்கடேசன் எம்.பி.யிடம் ரயில்வே அமைச்சர் வாக்குறுதி.

ரயில்வே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?  ரயில்வே துறை அமைச்சர் அளித்த வாக்குறுதி என்ன?!!

சென்னை மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே பரிந்துரைத்த நிலையில் ரயில்வே போர்டு இன்னும் அனுமதி கொடுக்காமல் இருக்கிறது.  அதில் அமைச்சர் தலையிட்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய வெங்கடேசனிடம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

சங்க தலைவர்களுடன் சந்திப்பு:

பின்னர் இரயில் பவனில்  டிஆர்இயு மற்றும் ஐசிஎஃப்யுனைட்டட் வொர்க்கர்ஸ் யூனியன் தலைவர்களுடன் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்களை சந்தித்து போது “தண்டவாள பணியின் போது ரயில் மோதி மரணிக்கும் கொடுமையை தடுக்க ரயில்வே டிராக் மேன்களுக்கு உடனடியாக இரட்சக் என்ற  பாதுகாப்பு கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வும் வாக்குறுதியும்:

மேலும் 4800 ,5400  ஊதிய நிலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அக்கவுண்ட்ஸ் அல்லாத கேட்டகரிகளுக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளதை சங்கப் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.  அதில் விடுபட்ட கேட்டகரிகளுக்கும் அதற்கு விதிக்கப்பட்டுள்ள 50 சத உச்சவரம்பு 5400 ஊதிய நிலையாளர்கள்  பதவி உயர்வு பெறுவதை தடுப்பதாக உள்ளது என்பதை எம் பி சு. வெங்கடேசன் அமைச்சரிடம் சுட்டிக் காட்டிய போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அஸ்வின் கூறியுள்ளார்.  

இதனுடன் 4600 என்ற உச்ச ஊதியம் உள்ள அனைத்து கேட்டகரிகளுக்கும் இந்த விதியை பொருத்த  வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.  

டி ஆர் இ யூ சார்பாக எழுப்பபட்ட கோரிக்கைகள்:

  • புதிய தொகுப்பு சட்டத்தின் படி தொழிற்சங்க அங்கீகார தேர்தல் இடைவெளி அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளே என்ற போதிலும் 9 ஆண்டுகளாகியும் அங்கீகார தேர்தல் நடத்தாமல் இருப்பது தொழிற்சங்க ஜனநாயகத்திற்கு முரணானது என்று எடுத்துக் கூறி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

  • தொழில் உறவு தொகுப்பு சட்டமானது  2024ஆம் ஆண்டுநாடாளுமன்றத் தேர்தலுக்குள் அமல்படுத்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது சாத்தியமில்லை தானே என்ற கேள்விக்கு ஆம் அதற்குள் தொகுப்பு சட்டம் அமலாவது சாத்தியமில்லை என்று ரயில்வே துறை அமைச்சர் ஒத்துக் கொண்டுள்ளார்.  இதற்கு மாற்றாக 2013 தேர்தலில் 20 சதவீத வாக்கு பெற்ற சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது அதை நிச்சயமாக நிறைவேற்றி தருவதாக வாக்களித்துள்ளார்.

  • ரயில்வே சிக்னல், பிரிட்ஜ் தண்டவாளப்பிரிவு போன்ற பகுதிகளில் பணியின்போது தொழிலாளர்கள் ரயில் மோதியோ மின்சார அதிர்ச்சியின் காரணமாகவோ உயிரிழக்க நேரிடுவதால் அவர்களுக்கும் ரிஸ்க் அலவன்ஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சங்க உறுப்பினர்கள் முன் வைத்த போது அதற்கான ஆணையை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். 

  • தெற்கு ரயில்வேயில் முறைப்படி சப்ஸ்டிடியூட்டுகளாக பணியமர்த்தப்பட்டுள்ள 531 அப்ரசண்டிஸ் பணியாளர்கள் உயர் நீதிமன்ற வழக்கின் காரணமாக பணி நிரந்தரமும் பதவி உயர்வும் இன்றி  பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி அவர்களுக்காக அந்த வழக்கை விரைந்து முடித்து கொடுக்கவும் ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயிலுக்கான ட்ராக்சன் மோட்டார் இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அதனை ரயில் பெட்டி தொழிற்சாலையிலேயோ அல்லது சித்தரஞ்சன்  லோகோ மோட்டிவ் ஒர்க் சிலோ அல்லது பெல் மூலமாகவோ உற்பத்தி செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.  அவ்வாறு செய்தால் மட்டுமே ஆத்ம நிர்பார்  பூர்த்தி அடையும் என்று ரயில் பெட்டி தொழிற்சாலை சங்கம் கூறியதையும் நிறைவேற்றி தருவதாக வாக்களித்துள்ளார் அஸ்வின் வைஷ்ணவ்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ட்விட்டரில் முதல் 5 இடங்களை பிடித்த முதலமைச்சர்கள்...முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிடித்த இடம் என்ன??!!