கள்ளக்குறிச்சி எஸ்.பி.மாற்றம்...தமிழக அரசு உத்தரவு!

கள்ளக்குறிச்சி எஸ்.பி.மாற்றம்...தமிழக அரசு உத்தரவு!

கனியாமூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய மாவட்ட கண்காணிப்பாளராக பகலவனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்:

சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

கலவரம் வெடித்தது:

மாணவி மரணம் தொடர்பாக நீதி கேட்டு கடந்த 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த அமைதியான போராட்டம், கடந்த 17 ஆம் தேதி மிகப் பெரிய கலவரமாக மாறியது. அந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் பள்ளியை முற்றுகையிட்டு,  பள்ளிப் பேருந்துகள், அலுவலகம் மற்றும் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த கலவரத்தில்  காவலர்கள் பலர் காயமடைந்தனர். 

பொதுமக்கள் அமைதி காக்க வலியுறுத்தல் : 

இதனைதொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு, போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறை செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அதேசமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவத்தில் விசாரணை நடைபெற்று குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை விதிக்கப்படும் அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதன்பின் அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவலர்களை வரவழைத்து  கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார்:

பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் வீடியோ காட்சிகளின் அடிப்படையிலும் மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கலவரம் போல் தெரிவதாகவும், சிறப்புக்குழு அமைத்து அனைவரையும் கைது செய்யவும் உத்தரவிட்டது. 

சிறப்பு புலனாய்வுக் குழு:

இந்தநிலையில்   கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து விசாரிக்க டிஜஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் சிறப்புக் குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இந்த புலனாய்வுக்குழுவில் ஆவடி பட்டாலியன் கமாண்டன்ட் ராதாகிருஷ்ணன், எஸ்.பி. கிங்ஸ்லி உள்ளிட்ட 5 அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.  வன்முறைக்கு பின்னணியில் உள்ள சதியை கண்டுபிடிப்பதற்காக டிஜிபி சைலேந்திர பாபு அமைத்த இந்த சிறப்பு புலனாய்வு குழு தனது பணியை துவங்கியது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி.பணியிட மாற்றம்:

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு பின்னணியில் உள்ள சதியை கண்டுபிடிப்பதற்காக டிஜிபி சைலேந்திர பாபு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு தனது பணியை துவங்கியது நிலையில், கள்ளக்குறிச்சி எஸ்.பி. அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறையின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக இருந்த செல்வகுமார் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

யார் புதிய எஸ்.பி.:

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிய எஸ்.பி.யாக திருவெல்லிகேணி காவல் மாவட்ட துணை ஆணையராக பணியாற்றி வந்த பகலவன் ஐ.பி.எஸ் -ஸை புதிய எஸ்.பி.யாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது