அத்தியாவசிய தேவைக்காக ஆபத்தான பயணம்!

அத்தியாவசிய தேவைக்காக ஆபத்தான பயணம்!

சூளகிரி- சின்னாறு அணைக்கு இடையே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த மக்கள் 45 ஆண்டுகளாக பரிசலில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அவலம் தொடர்ந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சியில் போகிபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. சூளகிரி - சின்னாறு அணைக்கட்ட காமநாயக்கன்பேட்டை, ஒண்டியூர், போகிபுரம் ஆகிய கிராம மக்கள் 45 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியேற்றப்பட்டு காமராஜர் காலத்தில் அணை கட்டப்பட்டது. அணைக்கு மத்தியில் போகிபுரம் கிராமத்தின் ஒருப்பகுதி மட்டும் வெளியேற்றப்படாமல் அங்கேயே இருந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது 100 குடும்பங்களாக வளர்ந்துள்ள போகிபுரம் கிராமத்தினருக்கு, அடிப்படை வசதிகள் வளரவில்லை என்பதுதான் சோகம். போகிபுரம் கிராமத்தினர் பள்ளி, கல்லூரிகளுக்கும் சாதாரண மளிகை பொருட்களின் தேவைக்கும் 5 கிமீ தூரத்தில் உள்ள சூளகிரிக்கு தான் செல்ல வேண்டும்.

5 கிமீ தூரம் என்றாலும் செல்ல வழியில்லை என்பது தான் அவலம், சூளகிரி - சின்னாறு அணையை கடந்துதான் செல்ல வேண்டும். ஆண்டில் 10 மாதங்கள் அணையில் நீர் இருக்கும் என்பதால் 400 மீட்டர் தூரத்தை பரிசலில் கடந்தால் தான் அக்கறைக்கு செல்ல முடியும் என்கிற நிலையில் 15 அடி ஆழ நீரில் ஆபத்தான பரிசல் பயணம் தான் ஒரே தேர்வாக உள்ளது. காலை, மா

லை பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்களை பெற்றோர்களே பரிசல்களை அழைத்து சென்று, அழைத்து வருவதுமாக உள்ளது.

ஒரு தீப்பெட்டி பெற வேண்டுமானாலும் சூளகிரிக்கு சென்றுதான் மளிகை கடையில் பெற வேண்டும், கறவை மாடுகளில் கறக்கும் பாலை விற்பனைக்காக பால் பண்ணைக்குகூட பரிசலில்தான் கொண்டு செல்ல வேண்டும்.

ஆற்றைக் கடக்கும் கிராமம் என்பதால் அங்கன்வாடி, நியாய விலைக்கடை, தொடக்கப் பள்ளி என எதுவுமே இங்கு இல்லை. கர்ப்பிணி பெண்கள், உடல் நலக் குறைப்பாடு நேரங்களில் அவசரமாக செல்ல முடியாத சூழலில் பலரிடமும் முறையிட்டும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போகிபுரம் கிராமத்திற்கு செல்ல மேம்பாலம் அமைக்க தொடங்கிய பணிகள் 30% அளவிலேயே நின்றுவிட்டன. அணையில் நீர் அதிகமாக உள்ளதென்பதால் பணிகளை தொடர முடியாதென பொதுப்பணித்துறையினர் கைவிட்டதாக சொல்லப்படுகிறது.

45 ஆண்டுகளாக தொடரும் இந்த அவலநிலையில் பள்ளி படிப்பை தொடர முடியாமலும், திருமணத்திற்கு தயாரான ஆண்களுக்கு பெண் கொடுக்க தயங்கும் அவலமும் தொடர்வதால், போகிபுரம் கிராமத்திலிருந்து வசதிகளை எதிர்ப்பார்த்து ஏராளமான குடும்பங்கள் நகர பகுதிக்கு இடம் பெயர்ந்தது என்கின்றனர் கிராமத்தில் உள்ள மூத்தோர்.

ஆற்றைக் கடக்க முடியா விட்டால் வனப்பகுதியினுள் ஒத்தையடி பாதையில் 10 கிமீ தூரம் பயணிக்க வேண்டும் என்பதால் கைவிடப்பட்ட உயர்மட்ட பால பணிகளை தொடர வேண்டுமென்பதே கிராம மக்களின் ஒரு தலைமுறையினரின் கோரிக்கையாக உள்ளது.

தற்காலத்தில் இல்லம் தேடி கல்வி வந்த நிலையில், இந்த கிராம மக்களின் இல்லங்களுக்கு செல்ல சாலைகளை எதிர்ப்பார்த்துள்ளனர். 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது கைவிடப்பட்ட மேம்பால பணிகளை தொடர்வார்களா? என்கிற ஏக்கத்தோடு மாணவ, மாணவிகள் தாங்களாகவே பரிசலை இயங்கி சென்றனர்.

ஒரே பரிசல் மட்டுமே உள்ள நிலையில் இருப்புறங்களிலும் கயிற்றால் கட்டப்பட்டு கயிற்றை இழுத்தவாறே கிராம மக்கள் பயணித்து வருகிறார்கள், இந்த பரிசல் கூட அரசால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!: