வசமாய் சிக்கிய ஆதாரங்கள்... சிவசங்கர் பாபாவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல் !!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா உட்பட 4 பேருக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட   குற்றப்பத்திரிக்கையை  சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.  

வசமாய் சிக்கிய ஆதாரங்கள்... சிவசங்கர் பாபாவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல் !!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரில் 3 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் கடந்த ஜூன் 18 ஆம் தேதி  சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சிவசங்கர் பாபா மாணவிகளை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று பள்ளி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் முன்ஜாமீன் வாங்கிய சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியைகளான தீபா உட்பட 4 பேரை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர். மற்றொரு ஆசிரியரான பாரதி வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சிவசங்கர் பாபா ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 59 வது நாளான இன்று சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டுள்ள முதல் போக்சோ வழக்கிற்கான குற்றப் பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக 40 சாட்சியங்களின் அடிப்படையில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தயார் செய்து தாக்கல் செய்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக சிவசங்கர் பாபா, அடுத்தடுத்த குற்றவாளிகளாக ஆசிரியைகளான பாரதி, நடன ஆசிரியை சுஷ்மிதா, தீபா ஆகிய 4 பேருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் சமர்பித்துள்ள இந்த குற்றப் பத்திரிக்கையின் பேரில்  செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். ஆசிரியையான பாரதி வெளிநாட்டில் இருப்பதால் அவர் பெயரில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.