"என்.எல்.சிக்கு அடிமையாக தொண்டூழியம் செய்கிறது தமிழக அரசு" அன்புமணி சாடல்! 

"என்.எல்.சிக்கு அடிமையாக தொண்டூழியம் செய்கிறது தமிழக அரசு" அன்புமணி சாடல்! 

ஏற்கனவே நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருக்கும் நிலையில் மீண்டும் புதியதாக நிலம் கையபடுத்த தமிழக தொழிற்துறை அறிவிப்பு விடுத்தை எதிர்த்து, தமிழக அரசு என்எல்சிக்கு அடிமையாக தொண்டூழியம் செய்து வருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நிலம் கையப்படுத்த அறிவிப்பு:

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி 3 ஆம் சுரங்க விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி கால்வாய் வெட்டும் பணி நடைபெற்றது. இதனை கண்டித்து அன்புமணி இராமதாஸ் தலைமையில் நெய்வேலி நிலக்கரி சுரங்க தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அன்புமனி இராமதாஸ் கைது செய்யப்பட்டதால் பாமகவினர் காவல் துறையினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. 

இந்நிலையில்  என்எல்சி 1 மற்றும் 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி அம்மேரி, தென்குத்து, தொப்பிலிக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக தொழிற்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், தமிழகத்தை நாசமாக்கும் என்.எல்.சியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

அன்புமணி கண்டனம்:

மேலும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை என்.எல்.சி நிறுவனம் ஏற்கனவே பறித்துக் கொண்டிருக்கும் சூழலில், இப்போது மீதமுள்ள நிலங்களையும் பறிக்க என்.எல்.சி துடிப்பதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைபோவதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதைப் போல அமைந்திருக்கிறது. தமிழக அரசிடம்  இருந்து இப்படி ஒரு துரோகச் செயலை தமிழக மக்கள் எதிர்பார்க்கவில்லை; மன்னிக்கவும் மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

நிலப்பறிப்பின் விளைவு:

மேலும், 1956-ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை 37,256 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி நிறுவனத்திற்கு  தமிழ்நாடு அரசு பறித்துக் கொடுத்திருக்கிறது. இந்த நிலங்கள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்தமானவை. பறிக்கப்பட்ட நிலங்களை வைத்திருந்த 25 ஆயிரம் குடும்பங்களும் சுயமரியாதையுடனும், கவுரவத்துடனும், பொருளாதார தன்னிறைவுடனும் வாழ்ந்து வந்தனர். நிலங்கள் பறிக்கப்பட்ட பிறகு அவர்கள் நாடோடிகளாகவும், உள்நாட்டு அகதிகளாகவும் மாற்றப்பட்டு விட்டனர். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து விட்டு, கூனிக்குறுகி கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; அவர்கள் வாழ்வதற்கு மாற்று இடங்கள் வழங்கப்படவில்லை; நிலங்களைக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த  35 ஆண்டுகளில் நிலம் கொடுத்தவர்களில் ஒருவருக்குக் கூட வேலை வழங்கப்படவில்லை. மாறாக,  என்.எல்.சி நிறுவனம் கோடி, கோடியாக லாபம் ஈட்டி வெளிமாநிலங்களில் முதலீடு செய்து வருகிறது எனக் கூறியுள்ளார்.

தமிழக அரசின் துரோகம்:

என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தித் தரும்படி மத்திய அரசே கடும் நெருக்கடி  கொடுத்தாலும், அதற்கு பணியாமல் உழவர்களையும், அவர்களின் வேளாண் விளைநிலங்களையும்  பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், தமிழக அரசோ, அதன் கடமைகளையும்,  பொறுப்புகளையும் மறந்து விட்டு என்எல்சிக்கு அடிமையாக தொண்டூழியம் செய்து கொண்டிருக்கிறது. என்எல்சியால் தமிழகத்திற்கும், குறிப்பாக கடலூர் மாவட்டத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டில் ஒரு நாள் கூட நீடிப்பதற்கு தகுதியற்ற நிறுவனம் எனும் நிலையில்,  அதை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தான் தமிழக அரசு ஈடுபட வேண்டும். அதற்கு மாறாக,  என்.எல்.சி கேட்டவுடன் தனது அதிகாரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, உழவர்களின் நிலங்களைப் பறித்து தருவது மக்களுக்கு செய்யும் துரோகம் என சாடியுள்ளார். 

அறிவுரை:

தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் மீண்டும் வழங்கும் அறிவுரை என்னவென்றால் மக்களின் பக்கம் நில்லுங்கள். மண்ணை நாசமாக்கும் பெரு நிறுவனங்களுக்கு துணை போகாதீர்கள் என்பது தான். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பறித்தும் கடலூர் மாவட்ட மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதாலேயே, அவர்கள் அனைத்து நிலப்பறிப்புகளை பொறுத்துக் கொள்வர் என்று  என்று நினைக்க வேண்டாம். அவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லை கடந்தால் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். இதை தமிழக அரசு உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:"அண்ணாமலை செல்வது பாதயத்திரை அல்ல; ரத யாத்திரை" திருநாவுக்கரசர் கருத்து!