முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா
கொரோனா நோயாளிக்கு மருந்துகளை ஏற்பாடு செய்துக் கொடுத்ததற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி வருகிறது. கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் நிலவுவதால் சுகாதாரத்துறை திணறிக் கொண்டிருக்கிறது. இதனால், பல நோயாளிகளுக்கு மருந்து மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட அத்திவாசியங்கள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அத்தகைய நோயாளிகளுக்கு உதவி செய்யும் விதமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள் பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களின் மூலமாக அவர்களது தேவையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். அந்த வகையில் பிரபல பேட்மிட்டன் வீராங்கனையும், நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டாவும் கொரனோ நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.
கடந்த 1ஆம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த மணி தேவி என்ற கொரோனா நோயாளிக்கு ஆம்போடெரிசின் என்ற மருந்து தேவைப்படுவதாக ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்திருந்தார். இது ஸ்டாலினின் கவனத்திற்கு எட்டியுள்ளது. உடனடியாக அந்த நோயாளிக்கு தேவையான மருந்தை அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், உரிய நேரத்தில் மருந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சரியான நேரத்தில் மருந்தை ஏற்பாடு செய்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து ஜுவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஒரு உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி.
அந்த கொரோனா நோயாளிக்கு உங்கள் உதவியுடன் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஜுவாலா கட்டா, நடிகர் விஷ்ணு விஷாலை திருமணம் செய்துக் கொண்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
Thank you sir @mkstalin for ur prompt action to save a life in dindigul