“மருந்துகள் ஏழை மக்களை சென்றடைவதில்லை” - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
அரசு மருத்துமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தனக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி, கோவை அரசு ம்ருத்துவமனை மருந்து கடை பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அப்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கம்மை, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் வைரஸ் நோய்கள் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் படிக்க | கடத்தியவர்களிடம் இருந்து நொடி பொழுதில் தப்பி ஓடிய சிறுவனின் தைரியச் செயல்...
மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.
மேலும் படிக்க | புதுத் துணி வாங்கித் தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை...
இதை ஏற்றுக் கொண்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிப்பது என்பது தீவிரமானது எனவும், மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அரசு மருத்துமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன என வேதனை தெரிவித்தார்.
மேலும் படிக்க | மிடுக்காக உடை அணிந்து வந்து பாருக்குள் ரகளை செய்த இளைஞர்...! பரபரப்பான சிசிடிவி காட்சிகள்...!