சட்டம் படித்த முதல் திருநங்கை...! வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை வழங்கிய பார் கவுன்சில் தலைவர்..!

சட்டம் படித்த முதல் திருநங்கை...! வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை வழங்கிய பார் கவுன்சில் தலைவர்..!

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கைக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் வழங்கினார்.

சென்னைவேளச்சேரி பகுதியை சேர்ந்த திருநங்கை கண்மணி, செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்பை முடித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமையுடன் பதிவு செய்த கண்மணிக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகிவற்றை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழங்கினார்.

சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் கௌரி ரமேசும் உடனிருந்து, பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமல்ராஜ், ஒவ்வொரு ஆண்டும் சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பிற மாநிலங்களில் படித்து தமிழ்நாடு கவுன்சிலில் பதிவு செய்ய வரும் வழக்கறிஞர்களின் ஆவணங்கள் முறையாக ஆராய்ந்து பிறகே, பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், குடும்பத்தினர் ஏற்க மறுத்தாலும் பள்ளி கல்லூரியில் சக மாணவர்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கல்வி கற்க துணை புரிந்ததாக கண்மணி பெருமையுடன் கூறுகிறார். வழக்கறிஞர் ஆனதுடன் நிறுத்தி விடாமல் சிவில் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்று வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில் வேளச்சேரியில் உள்ள சந்துரு லா அகாடமியில் பயிற்சி பெற்று வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க : தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பாஜக நிர்மல் குமார்..! உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் கூடுதல் மனுத்தாக்கல்..!