மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்க கூடாது - அமைச்சர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்க கூடாது - அமைச்சர் அறிவுறுத்தல்

கொசுவலை வழங்கும் திட்டம்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் பொது சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் 2ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொசு வலை மற்றும் போர்வைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சியில் 3 லட்சம் கொசுவலைகள் நீர்நிலைகளில் ஓரங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் சைதாப்பேட்டையில் 23 ஆயிரம் குடியிருப்புதாரர்களுக்கு கொசு வலைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி பெண் விவகாரம்

அமைச்சர் மா.சுப்ரமணியன் பொதுமக்களுக்கு கொசுவலைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம்  பேசுகையில், கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி பெண் கருகலைப்புக்கான மருந்தினை உட்கொண்டதால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம், அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும். மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

மருத்துவ கவுன்சில் தேர்தல்

மருத்துவ கவுன்சிலில் வாக்களிப்பு முறைப்படி பதிவாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் 1.5 லட்சம் மருத்துவர்கள் வாக்களிக்க தகுதியாக உள்ளனர். மாவட்ட கவுன்சிலில் 10 பேர் உறுப்பினர்கள், அதில் 3 பேரை அரசு தேர்ந்தெடுக்கும், 7 பேர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன் பின் தலைவர், துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும்.  

மேலும் படிக்க: அம்பேத்கரே இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி - சசி தரூர் புகழாரம்!

தொடர்ந்து பேசிய அமைச்சர், மருத்துவ கவுன்சிலுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பட உள்ளது. அதில் பதிவாளர் பதவி குறித்து விளக்கம் கேட்கப்பட உள்ளது என்றும், நீதிமன்றத்திலும் மருத்துவ சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விதிமுறைகளின் படி மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என பாமக தலைவர் ராமதாஸின் அறிக்கைக்கு பதிலளித்தார்.

தமிழ் வழி மருத்துவ கல்லூரி கேட்டு கோரிக்கை 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கை. புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு 6 மருத்துவ கல்லூரி மற்றும் 1 தமிழ் வழி மருத்துவ கல்லூரி என 7 மருத்துவ கல்லூரி வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து புதிய மருத்துவ கல்லூரி குறித்து நேரில் சென்று கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.