ஓபிஎஸ்சின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது...!

ஓபிஎஸ்சின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது...!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் 95 வயதில் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் கடந்த 24ஆம் தேதியன்று காலமானார். தாயாரை இழந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்தனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைவதாக கூறி, ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரம் ஓய்ந்தது...!

இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,  ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு செய்தி மிகுந்த வேதனைக்கு உரியது என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மேலும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், அமமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்பினர் மற்றும் குடும்பத்தினர் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்ட ஓபிஎஸ் தாயார் பழனியம்மாளின் உடல், வடகரை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.