பன்னாட்டு, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து...!

பன்னாட்டு, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து...!

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலின் எதிரொலியாக பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்கள் கொண்ட 27 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது 3 பன்னாட்டு விமானங்கள் கொண்ட 6 சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நள்ளிரவு 12.50 மணிக்கு கொழும்பு சென்றுவிட்டு அதிகாலை 4.20 மணிக்கு சென்னை திரும்பும் விமானமும் அபுதாபியில் இருந்து இரவு 7.50 மணிக்கு வந்து, சென்னையில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமானமும், மாலை 6 மணிக்கு சென்னை வந்து விட்டு, காலை 7 மணிக்கு ரீயூனியன் செண்ட் டென்னிஸ் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

மேலும், நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த மலேசியா, அகமதாபாத், மும்பை, தோகா ஆகிய 4 விமானங்கள் ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. சிங்கப்பூர், இந்தூர், துபாய் ஆகிய 3 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் வானிலை சீரானதும் திருப்பி விடப்பட்ட விமானங்கள் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய மலேசியா, மும்பை, கவுகாத்தி, பக்ரைன், அபுதாபி, புனே, சிங்கப்பூர், கொழும்பு உள்பட 20க்கும் மேற்பட்ட விமானங்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு காலதாமதமாக செல்கின்றன. விமான பயணங்கள் ரத்து மற்றும் கால தாமதம் குறித்து பயணிகளுக்கு உரிய தகவல்கள் தரப்பட்டு உள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : மாண்டஸ் புயலின் நிலை என்ன...? வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது...?