
தமிழ் சினிமாவின் ஆக சிறந்த யதார்த்த நடிகர்களில் ஒருவர் நாசர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தனது நடிப்பாற்றலால் மக்களின் மனதை கவர்ந்தவர். நடிகர், இயக்குநர், வசனகர்த்தா, பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பல அவதாரங்களை கொண்ட நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
பாசமலர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதி, திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா திரு.ஆரூர்தாஸ் வயது முதிர்வு காரணமாக நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானதையடுத்து, அவருக்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் நாசர்.
நாசரின் இரங்கல் செய்தி கீழ்வருமாறு:
அவரது வசனத்தில் வெளியான விதி படம் திரையை தாண்டி ஆடியோ கேசட்டுகளில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததை யாராலும் மறக்க முடியாது. தினத்தந்தி நாளிதழில் 50 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றை எழுதி தமிழ் திரைப்பட வரலாற்றையே பதிவு செய்த அயராத உழைப்பாளி ஆரூர்தாஸ் ஐயா அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கரங்களால் கலைமாமணி விருதை பெற்றவர். தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் நினைவாக வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான கலைத்துறை வித்தகர் விருதை முதலில் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது தமிழ் திரைத்துறைக்கே கிடைத்த பெருமை.
மேலும் படிக்க: அப்பாவுக்கு அஞ்சலி.. கண்ணீருடன் எம்.எஸ்.பாஸ்கர்..!
ஆரூர்தாஸ் ஐயா அவர்கள் மறைந்தாலும் அவரது ஆழமான வசனங்களால் தமிழ் திரைத்துறை இருக்கும் வரை அவர் புகழ் நீடித்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ,தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
(M.நாசர்)
தலைவர்,
தென்னிந்திய நடிகர் சங்கம்