உருமாறிய கொரோனா வைரஸ் எதிரொலி..! சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை...!

உருமாறிய கொரோனா வைரஸ் எதிரொலி..! சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை...!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் 2 சதவீத பயணிகளுக்கு ரேண்டம் முறை அடிப்படையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில தினங்களுக்கு முன்பாக உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.  

இந்நிலையில், இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி விமான பயணிகள் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ,முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன போன்ற நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் நுழைவாயில்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் என்றும் 2% சதவீத பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யவும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா உறுதி செய்யப்படும் நபர்களின் மாதிரியை பகுப்பாய்வுக்கு அனுப்பவும், பயணத்திற்குப் பின்பும் உடலை சுய கண்காணிப்பு செய்து கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வரும் 24 ஆம் தேதி (நாளை) முதல் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடையும் பயணிகளுக்கு 2 சதவீதம் ரேண்டம் அடிப்படையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சென்னை விமான நிலையத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை நாளை ஆய்வு செய்ய இருக்கிறார் எனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு...