" சென்னையில் இயல்பை விட 13% அதிக மழை பதிவு..." - வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்

" சென்னையில் இயல்பை விட 13% அதிக மழை பதிவு..." - வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்

வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 

வானிலை நிலவரங்கள் குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வரும் நவம்பர் 12ம் தேதி வரை வடமேற்கு திசையில், தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 9ம் தேதி ஒரு சில இடங்களிலும், 10ம் தேதி அனேக இடங்களிலும், 11, 12, 13 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

மழை பதிவு :

கனமழை பொறுத்தவரையில், 9, 10 தேதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 11, 12 தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 13ஆம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : 

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில், நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார்குளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்காள பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். எனவே மீனவர்கள் 12ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

சென்னையில் மழை பொழிவு : 

தொடர்ந்து பேசிய அவர், சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் 10ஆம் தேதி நகரின் ஒரு சில பகுதியில் கனமழையும், 11, 12 தேதிகளில் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், 13ஆம் தேதி ஒரு சில பகுதியில் கனமழையும் பெய்யக்கூடும். ஆனால் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை, 13 தேதி வரை மழை பெய்துள்ளது. கரையை ஒட்டி வரக்கூடும் என்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும், சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். 

இயல்பை விட 13% அதிக மழை : 

வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் 01 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டில் 23.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பளவு 24.3 செ.மீ இது இயல்பை விட இரண்டு சதவீதம் குறைவு. ஆனால் சென்னையில் இந்த காலகட்டத்தில் 46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது இந்த காலகட்டத்தில் இயல்பளவு 40.5 சென்டிமீட்டர் இது இயல்பை விட 13 சதவீதம் கூடுதலாகும் என கூறினார்.

இதையும் படிக்க : உண்டியலில் பணம் போட வேண்டாம்... விராலிமலை கோவில் நிர்வாகங்கள் அறிவிப்பு...