தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேர் கைது - ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேர் கைது - ராமதாஸ் கண்டனம்!

வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. 

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  அவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : புதுக்கோட்டை மீனவர்கள் உட்பட 20 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!

தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால் கூட அவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்கின்றனர். இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மரபுவழியாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20 குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.