தங்கப் பதக்கத்துடன் சாய்கோம் மீராபாய்:

தங்கப் பதக்கத்துடன் சாய்கோம் மீராபாய்:

2022ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் சமீபத்தில் நடந்து வரும் நிலையில், இந்திய வீரர்கள் இது வரை பல பதக்கங்கள் வென்றுள்ளனர். ஆனால், முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சைகோம் மீராபாய் சானு தான். பளுதூக்கல் போட்டியில் 201 கிலோ தூக்கி சாதனை படைத்திருந்தார்.

இந்தியாவின் பெருமை:

ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு, தற்போது நடந்து வரும் 2022ம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் படிக்க: காமன்வெல்த் போட்டிகள் : பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் இந்தியா !!

தங்கப்பதக்கம்:

மகளிருக்கான 49 எடைப் பிரிவு பளுதூக்கல் போட்டியில், 88 கிலோ மற்றும் 113 கிலோ பளுதூக்கி, தனது சாதனைகளையே முறியடித்திருந்தார். அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், தனது தங்கப்பதக்கத்துடன் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பல வாழ்த்து கமெண்டுகளைக் கொடுத்து வருகின்றனர்.

தகுதியானவர் தான்:

இந்த நிலையில், ‘சௌரப் சின்ஹா’ என்ற சானுவின் ரசிகர் ஒருவர், பிரபல ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வர்த்-தை டாக் செய்து, “உங்களது சிறப்பு சுத்தியலை கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது” என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த க்ரிஸ், “அவர் அதற்கு தகுதியானவர்தான். வாழ்த்துகள் சைகோம். நீங்கள் ஒரு லெஜெண்ட்” என்று பதிவிட்டிருந்தார். இது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தோர்- இடி மின்னல்களின் கடவுள்:

மார்வெல் ஸ்டூடியோஸ்- தயாரிப்பில், பல வகையான கதைகளும், சூப்பர் ஹீரோக்களும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், நோர்ஸ் தொன்மவியலில், இடி மின்னல்களின் கடவுளான ‘தோர்’, சுத்தியலை ஆயுதமாகக் கொண்டுள்ளார். தனது கர்வத்தின் அடியாளமாகக் கொண்டிருக்கும் சுத்தியலை, அந்த கதாபாத்திரத்தில் நடித்த க்ரிஸ் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று கேட்டவுடன், யோசிக்காமல், கண்டிப்பாக என்ற பதில் பதிவிட்டதோடு, மீராபாய் சானுவிற்கு வாழ்த்துகளும் தெரிவித்து, அவரை ஒரு லெஜெண்ட் என்றும் பாராட்டியது, அனைவரது கவனத்தையும் பெற்றது.