அமர் பிரசாத்தின் காவல் நவம்பர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு..!

அமர் பிரசாத்தின் காவல் நவம்பர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு..!

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் காவலை நவம்பர் 3-ம் தேதி வரை நீட்டித்து, ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில்  அவரை ஆலந்தூர் நீதிமன்றம் நவம்பர் 3 -ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் வெளியே 100 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக் கம்பம் நடப்பட்டிருந்தது. முன்அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் கடந்த 20-ஆம் தேதி இரவு அகற்றினர்.

அப்போது பாஜக - காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தின்போது ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை கற்களை வீசி பாஜகவினர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டியை 5 காவலில் எடுத்து விசாரிக்க  கானத்தூர் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு அளித்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்று ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியும் வழங்கியது.

அமர்பிரசாத் போலீஸ் காவலில் ஒரு நாள் விசாரித்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் மீண்டும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை நவம்பர் 3-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க   | "கொலை வழக்கில் உள்ளவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி