கர்மா திருப்பி கொடுக்கும் - வனிதா சொன்னது ரவீந்திரனுக்கா?

கர்மா திருப்பி கொடுக்கும் - வனிதா சொன்னது ரவீந்திரனுக்கா?

கடந்த ஒரு வாரமாக இணையத்தில் தீயாய் பரவும் விஷயம் என்றால் அது மகாலட்சுமி-ஃபேட்மேன் என அழைக்கப்படும் ரவீந்திரனின் திருமணம் தான். எப்படி இது நடந்தது? ஒருவேளை இது ஏதேனும் படம் அல்லது நாடகத்தில் வரக்கூடிய சீன் ஆக இருக்கும் என பலரும் தெரிவித்து வந்த நிலையில், இல்லை இல்லை இது உண்மையான திருமணம் தான். அதுவும் காதல் திருமணம் என இருவரும் தங்களது சமூக வலைதளம் மூலம் அறிவித்து அனைவரைக்கும் அதிர்ச்சியளித்தனர்.. 

சீரியல் வில்லி:

மகாலட்சுமியை பற்றிக் கூற வேண்டுமென்றால் 2000-ம் ஆண்டுகளில் தனியார் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர். பின்பு படிப்படியாக நாடகங்களின் பக்கம் சென்று, தொடர்ந்து பல முன்னணி நாடகங்களில் நடித்து, ஒரு வில்லியாக மக்கள் மனதில் பதிந்து போனவர். தனது க்யூட்டான நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர் மகாலட்சுமி. 

கிசுகிசுக்கள்:

அரசி, தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலாமனவர். 2016-ம் ஆண்டு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமிக்கு ஒரு மகனும் உள்ளார். அதன் பின் சில பல காரணங்களால், அனிலுடன் விவாகரத்து பெற்றவர் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இடையில், தேவதையைக் கண்டேன் சீரியலின் போது உடன் பணியாற்றிய ஈஸ்வர் என்ற நடிகருடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக ஈஸ்வரனின் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீ குற்றம் சாட்டியிருந்தார்கள். அப்போது சின்னத்திரை வட்டாரத்தில் இவர்களது பேட்டிகளும், குற்றசாட்டுகளும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 

இதையும் படிக்க: அப்போ இந்த பார்ட்னர்ஷிப் இனி இல்லையா? ரசிகர்களுக்கு ரெய்னா கொடுத்த ஷாக்..!

ரவீந்தர் சந்திரசேகரன்:

அதன் பின் அந்த சம்பவம் அப்படியே காலப்போக்கில் மறைந்து போக, மகாலட்சுமி பெரிதாக பொதுவெளியில் தொடர்பு இல்லாமல், சீரியல்களில் மட்டும் நடித்து வந்தார். இப்போதும் பிரபல தொலைக்காட்சியில் அன்பே வா, மகராசி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். இவர் இப்படி இருக்க, அந்தப்பக்கம் ரவீந்தர் சந்திரசேகரன். யூடியூப் சென்றாலே இவரை பற்றி தெரியாத ஆட்கள் இருக்க மாட்டார்கள். 

ரியாலிட்டி ஷோ டாக்ஸ்:

சுட்ட கதை, நளனும் நந்தினியும், நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல படங்களை தனது லிப்ரா ப்ரொடக்‌ஷன் மூலம் தயாரித்தவர் ரவீந்தர். அப்போதெல்லாம் அவர் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் யூடியூப்பில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோ குறித்து பேசிய பிறகு தான் மிகவும் பிரபலமானார். அத்தோடு தனது சேனலில் சில குறும்படங்களில் நடித்தும் மக்களிடம் ஃபேட் மேனாக அறியப்படுகிறார் ரவீந்தர். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. 

திருமணம்:

இப்படி இருவேறு துருவங்களில் இருந்தவர்கள், திடீரென எவ்வித பொது அறிவிப்பும் இன்றி உற்றார், உறவினர்கள் சூழ, திருப்பதியில் கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது. இது உண்மை தானா? ஒருவேளை அவர் எடுக்கப்போகும் புதிய படத்தில் வரும் சீன் ஆக இருக்குமோ என பல சந்தேகங்களும் எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல், இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை அவரவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உறுதிப்படுத்தினர். 

ஜோடி நேர்க்காணல்:

திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து ஜோடியாக சேனல்கள் பலவற்றிற்கும் நேர்காணல் கொடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு நேர்காணலிலும் வனிதா விஜயகுமார் பற்றி ரவீந்தரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எவ்வித பிரச்னைகளும் இல்லை. வனிதா அக்காவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு தைரியமானவர், நிச்சயம் எனது திருமணத்திற்கு அவர் வாழ்த்து தெரிவிப்பார் என தொடர்ந்து கூறிக் கொண்டே வந்தார் ரவீந்தர்.

வனிதா குறித்த கேள்வி:

இந்த கேள்விக்கான காரணம், பிக்பாஸின் போதும், வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த போதும் அவரை கடுமையாக விமர்சித்திருந்தார் ரவீந்தர். இருவருக்கும் இடையே அதே சோசியல் மீடியாவில் போரே நடந்தது. பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு பிள்ளைகள் இருக்கும் போது, வனிதா இப்படி அவரை திருமணம் செய்து கொண்டது தவறு, அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என சாடியிருந்தார். 

ரவீந்தர் கொடுத்த பதிலடி:

இப்போது ரவீந்தரும், ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் மகாலட்சுமியை திருமணம் செய்திருப்பதை பலரும் விமர்சித்திருந்தனர். இதே தானே வனிதா வாழ்க்கையிலும் நடந்தது? இப்போ மட்டும் நீங்கள் செய்தது தவறு இல்லையா என கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கும் ரவீந்தர் பதிலளித்து இருந்தார். நான் மகாலட்சுமியை திருமணம் செய்த போது யாரும் கண்ணீர் விட்டு அழவில்லை, அவளை விட்டுக் கொடுக்க முடியாது என யாரும் கூறவில்லை. ஆகையால் வனிதா-பீட்டர் பால் திருமணத்தோடு எங்கள் திருமணத்தை ஒப்பிட முடியாது எனக் கூறியிருந்தார். 

வனிதாவின் பதில்:

இதற்கு வனிதாவின் பதில் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், நேற்று வனிதா ஒரு ட்வீட் செய்திருக்கிறார்.

அதில், நான் மிகவும் பிஸியாக இருப்பதால், மற்றவர்களின் வாழ்க்கையை பற்றி ஆராய எனக்கு நேரமில்லை எனவும், கர்மாவுக்கு திருப்பி கொடுக்க தெரியும், நான் அதை நம்புகிறேன் என பதிவிட்டிருக்கிறார். ஆனால் அது யாருக்காக, எதற்காக என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஒருவேளை இது ரவீந்தருக்காக இருக்குமா? அல்லது வேறு யாருக்காகவாவது இருக்குமா? என பலரும் குழம்பி போய் உள்ளனர்.