
கடலூரில் இருந்து தனியார் பேருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பண்ருட்டி யூனியன் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டபோது திடீரென்று பின் சக்கரத்தின் வழியாக கரும்புகை வெளியேறியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதும், பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ருட்டி தீயணைப்பு படை வீரர்கள் தனியார் பேருந்தில் பின் டயரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஓடும் பேருந்தில் கரும்புகை வெளியேறிய சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பயணிகளை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டதால் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.